Thursday 21 July 2011

பொன்னியின் செல்வன்



”பொன்னியின் செல்வன்” மூன்றரை வருடங்கள் தொடராக வந்த ஒரு சரித்திர புனைவு. அமரர் கல்கியின் வெற்றி பெற்ற கதைகளுள் ஒன்று. இதை பற்றி எண்ணற்ற விமரிசனங்களும், தர்க்கங்களும், ஆராய்ச்சிகளும், ”அடித்தலும், துவைத்தலும்” நடந்து விட்டன. இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. கதை எழுதப்பட்டு கிட்டதட்ட 60 வருடங்களாகியும் வாசகர்கள் மத்தியில் இன்னும் அதனிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டுதானிருக்கிறது. வாசகர்கள் பல தளங்களில் இருந்தாலும் இன்னும் வாசிக்கப்படுவதால் நாவலை பொறுத்தவரையில் வெற்றிதான்.
     கதையின் அமைப்பு – நல்ல கதை. பிரமிக்க வைக்கும் கதை பின்னல். ஒவ்வொரு நிகழ்வுக்கும் தகுந்த உறுதியான காரணங்கள் பின் வருகின்றன. அவை சில சமயம் உடனே வந்து விடுகின்றன. சில சமயங்களில் ஆயிரம் பக்கங்களுக்கு அப்பால் வருகின்றது. வாசகர்களுக்கு நிகழ்வுகளின் காரணங்களை தொடர்வதே ஒரு சிறிய அறைகூவல்தான். கதாபாத்திரங்களின் இயல்பை கட்டுக் குலையாமல் கொண்டு செல்கிறார் அமரர் கல்கி. ஆரமபம் முதல் குழப்ப சிந்தனையுள்ள நந்தினி கடைசி வரை ஆதித்த கரிகாலன் “கொலை” வரை குழம்பிக் கொண்டிருக்கிறார். ஆதித்த கரிகாலன் தன்னை சூழ்ந்துள்ளவர்களிடம் கடைசி வரை விஷ வார்த்தைகள் கக்கிக்கொண்டே இருக்கிறான். அருள்மொழிவர்மன் கடைசி வரை அன்பை பொழிகிறார்.  நாவலின் பரபரப்பும், சஸ்பென்ஸும் துணைக்கு வருகிறது. வாசகர்களைக் வணிக எழுத்தை ஒத்த பரபரப்புடன் கட்டிப் போடுகிறது. முக்கியமாக ரவிதாஸனின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள்மொழிவர்மனையும், சுந்தர சோழரையும் ஒரே பொழுதில் ஒரே சமயத்தில் கொலை செய்ய முயலுவதும், அதற்கு சொல்லப்படும் காரணங்களும் இன்றும் தீவிரவாதிகளும் (9/11 இரட்டை கோபுரம், பெண்டகன் மற்றும் இதர இடங்களில் நாசவேலைகள்), பல அரசுகளும் பின் பின்பற்றும் யுக்தியாக (coordinated effort) இருப்பதை நாம் பார்க்கும் பொழுது கல்கி கதையில் போர் முறைகளையும், சதிகளையும் கையாண்ட விதம் பாராட்டுக்குறியதே.
வரலாற்று சம்பவங்களை வைத்து கதை வளர்ந்திருக்கிறது. மேல் கூறிய கதை சொல்லும் விதத்தை மறந்து விட்டால் நன்றாக எடுத்துச் சென்றுள்ளார். ஆதித்த கரிகாலன் கொலை வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் இன்றும் உறுதி செய்ய முடியாத ஒரு பெரிய புதிர். கதையிலும் அப்படியே அமைத்திருப்பது கதைக்கு பலம் சேர்க்கிறது. திருவாலங்காடு செப்பேடுகள் ”அருள்மொழியே முடிச்சூட்ட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள் ஆனால் மதுராந்தகருக்கு பட்டம் சூட்டினான் அருள்மொழி” என்று சொல்வதை வேறு அர்த்தம் கொள்கிறார்கள் சில சரித்திர வல்லுனர்கள். உடையார்குடி கல்வெட்டை ஆதாரமாக வைத்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “சோழர்கள்” என்ற ஆய்வில் மதுராந்தக உத்தம சோழன் தான் சதிசெய்து ஆதித்த கரிகாலனை கொன்றுவிட்டு சிம்மாசனத்தில் ஏறினான் என்று கூறுகிறார். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் என்ற ஆய்வாளர் இப்படி நடக்க வாய்பில்லை என்கிறார். ஆனால் 1971ல் விவேகானந்தா கல்லூரி மலரில் வந்த ஆர்.வி. சீனிவாசனின் கட்டுரையில் ஆதித்த கரிகாலனுடைய கொலையில் சதி செய்தது அருள்மொழிவர்மனும், குந்தவையும் தான் என்கிறார். ரவிதாசன் சோழ அரசில் முக்கிய பதவி வகித்து வந்தானென்றும், அவனுக்கு அருள்மொழி அளித்த தண்டனை மிகவும் சிறியது (சோழ நாட்டின் உள்ளேயே ரவிதாஸன் “நாடு” கடத்தப்பட வேண்டும்) என்றும் கருத்துக்கள் நிலவுவதே அதன் காரணமாக இருக்கலாம். இதை ஆய்வாளர் டாகடர். க.த.திருநாவுக்கரசு வன்மையாக மறுக்கிறார். ரவிதாஸன் பஞ்சவன் பிரம்மாதிராஜனும் அவன் சகோதரன் சோமன் சாம்பவனும் பிராமணர் குலத்தில் தோன்றியவர்களாதலால் அவர்களுக்கு மனு தர்மத்தின் படி மரண தண்டனை அளிக்க முடியாது என்பதால் தான் ரவிதாஸனுக்கு சிபி, மனுநீதிச் சோழன் குலத் தோன்றலாகிய அருள்மொழிவர்மன் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை என்று கூறிகிறார்.
ஒருவேளை அருள்மொழிவர்மனும், குந்தவையும் மதுராந்தகத் உத்தமச் சோழன், ரவிதாஸன் இவர்களுடன் சேர்ந்து சதி செய்திருப்பார்களா? ஆட்சி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதுராந்தகனும் அருள்மொழிவர்மனும் சோழ நாட்டை ஒருவர் பின் ஒருவராக ஆளலாம் என்று சமரசத்திற்கு வந்திருப்பார்களா? ஆனால் தெய்வ நம்பிக்கை (சிவபக்தி – ஆதாரம் ராஜராஜேஸ்வரம்) கொண்ட அருள்மொழி அப்படியெல்லாம் செய்வானா என்றும் தோன்றுகிறது. ஆதித்த கரிகாலன் கடவுள் நம்பிக்கையற்றனாக சித்தரிக்கிறார் அமரர் கல்கி. அது வரலாற்று உண்மையாக இருக்குமானால் இந்த கான்ஸ்பிரஸி தியரி மேலும் வலுப்பெறுகிறதல்லவா? இது பற்றி சமகால் ஆராய்ச்சியாளர் டாக்டர் நாகசாமி எதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜெயமோகனும் கருத்துகள் வைத்திருக்கலாம்.
எது எப்படியோ இந்த வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது மிகக் கடினம். அதனால் அமரர் கல்கியின் கருத்துக்களோடு ஒன்றிப் பார்த்தால் தான் பொன்னியின் செலவன் ஒரளவேனும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ராஜராஜனின் மேல் குற்றமிருக்கும் என்று நம்பினால் பொன்னியின் செல்வன் படைப்பு அமரர் கல்கியின் ஆத்மாவிலிருந்து உருவாக மிகவும் கடினமாக இருந்திருக்கும். அவரைப் பொறுத்தவரையில் அருள்மொழிவர்மன் அறம் நிறைந்த ஒழுக்க சீலனாகவே இருந்திருக்கிறான். அதை நில நாட்டப் பாடுபடுகிறான்.
அமரர் கல்கி பழந் தமிழகத்தின் விழுமியங்களை இன்றையமக்கள் அறியவேண்டும் என்பதே அவருடைய வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. “விமோச்சனம்” பத்திரிக்கை கட்டுரைகள், மது ஒழிப்பு பற்றிய கதைகள் போன்றவை மூலமாக அவர் கொண்டிருந்த விழுமியங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தார். பொன்னியின் செல்வனிலும் அந்த தரிசனம் கிடைக்கிறது. சோழ நாட்டுக்கு சதி செய்யும் கூட்டம் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் அறத்தை கடைபிடிக்கிறது. நந்தினி – பாண்டிய நாட்டிற்கு உண்மையாக இருப்பதற்க்காக சதி திட்டம் தீட்டினாலும் பெரிய பழுவேட்டறையருக்கு துரோகம் செய்யாமலிருக்கிறாள்; ரவிதாஸன் குழுவினர் – நந்தினியை அரசியாக ஏற்றுக் கொண்டபிறகு அவள் கூறுவதை மீறக்கூடாது என்று சூளுரைக்கினறனர்; ஆழ்வார்க்கடியான் நம்பி அநிருத்த பிரம்மராயரிடம் உண்மையாகவே இருக்கிறான்; பழுவட்டரையர்கள் சதி திட்டம் தீட்டினாலும் சுந்தர சோழ சக்ரவர்த்தியிடமும் சோழ நாட்டை பாதுகாப்பதிலும் நேர்மையாகவே இருக்கிறார்கள்; தவறுவதால் தன்னை தானே பெரிய பழுவேட்டரையர் மாய்த்துக் கொள்கிறார்; அருள்மொழிவர்மன் அறமே வாழ்க்கை என்று வாழ்கிறான். ஏன், ”மதுராந்தகன்” கூட சோழ நாட்டை போரிட்டே பிடிக்கவேண்டுமென நினைத்து செம்பியன் மாதேவியை விட்டு பிரிகிறான். கதை முழுக்க வரும் சதிகளும், வஞ்சங்களுக்குமிடையில் அமரர் கல்கி நிலைநாட்டும் விழுமியங்களை வாசகர்கள் தவறவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சோழ நாட்டு இயற்கை காட்சிகளை பற்றி கல்கி விவரிப்பது ஒரு ரொமான்ஸ் தான். அப்படிபட்ட வளம், தேனும் பாலும் ஓடியதாக சொலவதெல்லாமே மிகைப்படுத்தல் வகையிலே தான் பார்க்கமுடிகிறது. வானதியும் குந்தவையும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் காணும் கனவுகள் வாயிலாக சோழ நாட்டு வளத்தை விவரிக்கிறார். இந்த விவரிப்புகளை தனித்து எடுத்துப் பார்த்து பரிசீலிப்போமானால் சங்க கால் இன்பவியல இலக்கியம் சாயல் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால் பொன்னியின் செல்வன் இலக்கியமா என்று பலருக்கு ஒரு ஐயமிருக்கிறது. மொத்தமாக நோக்கும்பொழுது இது இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்ல முடியும். இலக்கிய கூறுகள் ஆங்காங்கு வெளிப்படுகிறதே தவிர, இது வரலாற்றை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அதன்மூலம் ஒரு ரொமான்ஸாகத்தான் பரிணமித்திருக்கிறது. அதாவது அமரர் கல்கியின் சோழ நாடு இப்படி இருக்கவேண்டும் என்ற அபிலாஷை வெளிவந்திருக்கிறது. இது ஏன் இலக்கியமல்ல? நான் புரிந்துக் கொண்ட கோட்பாடின் படி இலக்கியம் சமகாலங்களின் அல்லது கடந்த காலங்களின் இயல்பான நிலை, சூழல், மற்றும் மக்களின் வாழ்க்கை, நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை புதினம் அல்லது பிற இலக்கிய கருவிகள் மூலம் மிகையில்லாமல் அல்லது பெரிதும் மிகைப்படுத்தாமல் சொல்வது ஆகும். இந்தக் கோட்பாடின் படி அமரர் கல்கி அவற்றை ஆழமாக சொல்லவில்லை.  மேலும் 1950ல் உள்ள தொல்பொருள் அறிதலின் படி, ஆயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்தில் (அதாவது 900 முதல் 1100ஆம் ஆண்டு வரை) கல்வெட்டுகள் மூலமும், செப்பேடுகள் மூலமும் வெளியிடப்பட்ட சோழ நாட்டு வாழ்க்கை முறை தகவல்கள் இவற்றையெல்லாம் சொல்லும் வகையில் விவரமானதாக அமைந்திருக்கவில்லை என்பது நம்மால் ஊகிக்கமுடிகிறது. கிடைத்த செப்பேடுகள் பெரும்பாலும் அரசு மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையே அனேகமாக கூறி வந்தது. இந்த தகவல்களைக் கொண்டு வாழ்க்கை அனுபவங்களும் நிலைகளும் சூழலும் முழுமையாக கொடுக்க இயலாது. அமரர் கல்கி அந்த முயற்சியில் இறங்கவுமில்லை. உதாரணத்திற்கு தல்ஸ்த்யோவஸ்கியின் குற்றமும், தண்டனையும் பக்கத்துக்கு பக்கம் புதிய தரிசனங்களை கொடுத்துக் கொண்டே போகிறது. அதை பொன்னியின் செல்வனுடன் ஒப்பு நோக்கினால் இந்த வித்தியாசங்களை எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும்.
என்றாலும் கல்கி சில வரலாற்று நிகழ்வுகளின் மூலம் அகன்ற வாழ்க்கையை எடுத்துரைக்க முற்படுகிறார். அரபு நாடுகளுக்கும் சோழ நாட்டுக்கும் வணிகம் வளர்ந்து வந்தது. முன்னதாக மூன்று நூற்றாண்டுகளாக இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு சேர நாட்டில் (அன்றைய கேரளாவில்) இஸ்லாம் தன்னை ஸ்தாபித்திருந்தது. இந்த காலகட்டத்தில் அரபிக்கடலில் வணிக போக்குவரத்து பெருகியிருந்தது. கப்பல் கொள்ளையர்களும் வளர்ந்து வந்தனர். ஈழ நாட்டுவரை அரபு கப்பல் கொள்ளையர்களும் புழங்கி வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிகழ்வுகளாக கதையில் சேர்த்திருக்கிறார். வட நாட்டுக் கோவில்களை எல்லாம் இஸ்லாமியர்கள் இடித்து தள்ளிக் கொண்டிருந்ததை ஒரு முரட்டு மதம் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார். (ராஜபுட்ததான மன்னர் ராஜா தாஹீரின் கடல் கொள்ளையர்களின் ஊக்குவிப்பே இஸ்லாமியர்கள் முதன் முதலில் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருந்தது என்பது வரலாறு – இஸ்லாமிய தரப்பு வாதம்).
குறை என்று பார்க்கப் போனால் இது ஒன்று தான் – கதையின் நடை (ஓட்டமும் தான்) சில சமயங்களில் ஏதோ குழந்தைகளை வைத்து கதை சொல்வது போலிருக்கிறது. உதாரணத்திற்கு வந்தியத்தேவன் வம்பில் மாட்டும் பொழுதெல்லாம் அவனை காப்பாற்றுவதற்க்காகவே அனைத்து நிகழ்வுகளும் காத்துக் கொண்டிருப்பதாக சித்தரித்திருப்பது, தேவை ஏற்படும் பொழுதெல்லாம் ஆள் மாற்றம் சுலபமாக நடப்பது, ”இருளாக இருக்கிறதே, எப்படி போவது” என்று ஒரு கதாபாத்திரம் சிந்தனை செய்து கொண்டிருக்கும்பொழுதே ”இதோ வெளிச்சம்” என்று இன்னொரு பாத்திரம் உதவி செய்வது, அல்லது ”தண்ணீரில் விழுந்து விட்டோமே, படகு வேண்டுமே” என்றால் யாரவது ஒருவர் அந்தப் பக்கம் படகுடன் வருவது, போன்ற முதிர்வு பெறாத நடைகள் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல் சராசரி வணிக எழுத்திற்கும் கீழே போய்விடுகிறது. அதுவும் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து கிளம்பி புயலில் சிக்கி கோயிலில் படுத்து பின்னர் பாண்டிய நாட்டு ரவிதாஸன் ஒற்றர் கும்பல்கள் லவ்ட்ஸ்பீக்கர் இல்லாத குறையாக அவர்கள் திட்டத்தை விவரிப்பதை “ஒட்டு” கேட்பது – ஒரு வேளை நேரத்தை விரயம் செய்கிறோமோ என்ற சோர்வை உண்டாக்குகிறது. விதியே என்று முன்னகர்ந்தால் ஒரு கதாபாத்திரத்திற்கு பிற கதாபாத்திரங்கள் உதவி செய்வது போதாதென்று கல்கி நினைத்தாரோ என்னவோ – ”வந்தியத்தேவன் அராபியக் கொல்லையர்களிடம் கட்டுண்டு கிடக்கிறானே. அய்யய்யோ! எப்படி தப்பிக்கப் போகிறான், ஒரு வேளை அவன் கட்டுகள் இறுக்கமாக கட்டு படவில்லையோ? ஆம் அப்படி தான் இருக்கவேண்டும்” என்று கூறி தன் பங்குக்கு கடலில் குதித்து, கப்பலில் சென்று கட்டுகளை லூஸ் பண்ணிவிட்டுவிட்டு மாயமாக மறைகிறார். கொடுமையே என்றிருக்கிறது. ”ஆபத்தா, இதோ வருகிறேன்” என்று திடீர், திடீரென்று தோன்றும் எம்ஜியார் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அல்லது இன்றைய விஜய் சினிமாக்களை. ஒருவரும் வராவிட்டால் ஆசிரியரே வந்துவிடுவார். இதெல்லாம் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் போன்றவர்களுக்குதான். இருப்பதிலேயே வீரமான, புஜபல பராக்கிரம் நிறைந்த ஆதித்த கரிகாலனிடம் உதவிகளெல்லாம் பலிக்கவில்லை. ”அப்பாடா” என்றிருந்தது. 60 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால் இந்தக் குறையை கண்டுக் கொள்ளாவிட்டால் கதை காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு இனிய பயணமே.
பொன்னியன் செல்வன் கதையை பதின்ம வயதில் படிப்போருக்கு அனேகமாக பரவசம் கொடுத்திருக்கும். காலம் கடந்து படிப்போருக்கும் பரவசம் தரக்கூடிய கதைதான். முதிர்ந்த வாசகர்களுக்கு தகவல்களும் சில சிறிய பிரமிப்புகளும் காத்திருக்கின்றன. ஆனால் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய ஒரு புதினமே.


நன்றி :சிலிகான் ஷெல்ஃப் 

Saturday 16 July 2011

பாண்டிய முரசு

சரித்திரம்
            மூவேந்தர்களில் இருவரான சேரர், சோழர் ஆகிய இருவரும், வேளிர் குல சிற்றரசர்கள்  ஐவரும் இணைந்து தலையாலங்கானம் என்னும் இடத்தில் பாண்டியனுடன் போர் புரிகின்றனர். இப்போரில் பாண்டியன் எளிதில் வென்று தலையாலங்கானத்துச்  செரு வென்ற பாண்டியன்  நெடுஞ்செழியன் என்னும் பெயரை பெறுகிறான். சோழன் இப்போரில் படு தோல்வி அடைந்திருந்தாலும்   பின்னாளில் அவன் ராய சூயம் என்னும் வேள்வி நடத்த பாண்டியன் உதவி செய்கிறான்.
 
பாண்டிய முரசு
             தன்னை எதிர்த்தச்  சோழனுக்கு ஏன் பாண்டியன் ராய சூயம் செய்ய உதவ வேண்டும்.
             பாண்டியனுடைய சிறு படை எவ்வாறு தன்னை விட  பல மடங்கு பலம் வாய்ந்த எதிரிப் படையை எளிதில் வென்றது.
              பாண்டியனுடைய வெற்றிக்கு வித்திட்டது யார்?
              மகாபாரதத்தில் அர்ஜுனனின்  மைந்தன் அபிமன்யுவை வீழ்த்த கௌரவர்கள் அமைத்த பத்ம வியூகத்தை* தாமும் அமைத்து பாண்டியர்களையும் எளிதில் வீழ்த்தி விடலாம் என்று இருந்தவர்களை பாண்டிய படைத்தளபதி மோகூர் பழையன்  எவ்வாறு எளிதில் வீழ்த்தினான்.    
             அதற்கு பழையன் உபயோகித்த உத்திகள் நமக்கு அக்காலத் தொழில்நுட்பத்திறனை கூறுகிறது.
             போர் கலையில் வல்லவனாயும், போர் வியூகங்களை அமைப்பதில் நிபுணனாய் இருந்த   இருங்கோவேள் என்ற  வேளிர் குல சிற்றரசன் ஏன் இவ்விடத்தை தேர்ந்தெடுத்தான்.   
              மதுரை மாநகரில் முற்றிகை இட்ட சேரர், சோழர் படைகள் பாண்டியனிடம்    தோற்று  பின் வாங்கிய பின் உரையூருக்கோ, தஞ்சைக்கோ செல்லாமல்  ஏன்  தலையாலங்கானம் வந்து பாசறை அமைத்தனர்.
              அப்படைகளுக்கு  ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள்**  ஏன் உதவ முன் வர வேண்டும் .
              கடற்கொள்ளையனான  டைரியஸ் ஏன் படைத்தளபதி பழையனுக்கு உதவ வேண்டும்.
               பாண்டியர்களின் மிகப் பெரிய பலமாக கருதப் பட்ட பழையனை பாண்டியனிடமிருந்து அகற்ற,சேரன் பல சதித் திட்டங்களை எல்லாம் செய்தும், அவற்றிலிருந்து எவ்வாறு பழையன் தன்னையும் தனது காதலி மேகலையையும்  இரு முறை விடுவிக்க செய்கிறான்.  
              இப்படிப்பட்ட   வினாக்களுக்கு விடை கூறும் விதமாக கதையாசிரியர் உதயணன் அவர்கள்   பல்வேறு சுவாரசியமான  திருப்பங்களுடன் பதிலளித்திருக்கிறார் பாண்டிய முரசாக!



சரித்திர குறிப்புகள்

**   ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள்முறையே   
       எருமையூரன் - புரவிபடை
      திதியன் - தேர்படை
      பொருநன் - விற்படை
      எழினி -யானைப்படை
      இருங்கோவேள் - போர்வியுகம்

          
           நடுஞ்செழியனின் பாட்டனார் ஆரிய படை கடந்த பாண்டியனால் அமைக்கப்பட்ட ஐந்து முகங்களை கொண்ட மிக பெரிய முரசை நிர்வகித்தான் அதுவே பாண்டிய முரசு.


            சகட வியூகம் என்பது வண்டியைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்டது.
          கிரௌஞ்ச வியூகம் என்பது வனத்தில் கிரௌஞ்சாப் பறவைகள் எப்படிச் சரி சாரையாய்  செல்லுமோ அப்படிச் செல்லுமாறு நுண்ணிய கழுத்தையும் இடைக்கு ஏற்ற இறகினையும்  கொண்டதாக அமைக்கபடுவது.
          சருவதோபத்திர வியூகம் என்பது ஒவ்வொரு புறமும் எட்டு வளைவுகளைக் கொண்டதாக அணி வகுக்கப்படுகிறது.
          கோள வியூகம் என்பது எட்டு வட்டங்களாகவும் எல்லாப் புறங்களிலும் வாயில்களைக் கொண்டதாகவும் இருக்கக் கூடியது.
          வியாள வியூகம் - பாம்பு வியூகம்   
          கருட வியூகம்
          மகர வியூகம்
          ஊசி வியுகம்

    
      *  பத்ம வியூகம் (சக்கர வியூகம்) - வீரர்க் கோட்டை இந்த வியூகம் மற்ற வியூகங்களைப்  போல் நகராது. ஒரே ஒரு வாயில் தான்.
எட்டு வளையங்களைக் கொண்ட அந்த வியுகத்தில் வெளி வியுக வலயங்கள் முன்றையும் காலட்படைகளாலும் விற்படைகளாலும் அமைத்து கிழக்கு வளையங்களுக்கு பொருனனையும் மேற்கு  வளையங்களுக்கு எருமையூரானும்   தலைமை வகுத்தனர். அவற்றையடுத்த 4  வளையங்களில் புரவிப்படை அணி வகுத்தது.அவற்றுக்குச் சேரனும் சோழனுமாய் தலைமை வகித்தார்கள். வியூகத்தின் நடுவிலும் முகப்பிலும் தேர் படைகள் நிறுத்தி தலைமை தாங்கினான் திதியன்.   எழினியின் திறமை மிகுந்த யானைப்படை வியூகத்தில் சேராமல் வியூகதிகுப் பின்னன் யானைக் கோட்டை  ஒன்றை அமைத்தான்.இருங்கோவேள் வளையத்தின் வடக்கு புற பகுதிக்கு தலைமை தாங்கினான்.

இது என் முதல் முயற்சியாதலால் உங்கள் கருத்துகளை அறிய ஆவலுடனும், பிழைகளை நீக்கவும் உதவ உங்கள் ஆதரவுகளை கேட்டு கொள்கிறேன்.

check cheap prices

Sunday 10 July 2011

சாண்டில்யனின் கடல்புறா- பாகம் 1 பதிவிறக்கம்

 சாண்டில்யனின் கடல்புறா- பாகம் 1


கலிங்க நாடு. தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும், ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு. அதன் மன்னன் பீமன். இந்நாட்டின் முக்கியத் துறைமுகம் பாலூர்பெருந்துறை. கலிங்க நாட்டில் தமிழ்மக்களுக்கு போதிய பாதுகாப்பின்மையும், அநீதியும் இழைக்கப்படுகின்றன. ஏனென்றால் கலிங்கத்துக்கும் சோழநாட்டிற்கும் பகை.

எனவே சோழ நாட்டு மன்னன் வீரராஜேந்திரர்(இராஜேந்திர சோழரின் மகன்) சமாதானத்தை வேண்டி கருணாகரன் என்ற இளைய பல்லவனைத் தூதுவனாக அனுப்புகிறார். அவன் கப்பலில் புகாரிலிருந்து பாலூர்பெருந்துறை வருகிறான். துறைமுகத்தில் தன் உயிர் நண்பனும் சோழ-சாளுக்கிய இளவரசனான அநபாயன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கச் சோழன்) கலிங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டிடுப்பதை அறிந்து சினம் கொண்டு பீமனுக்கு எதிராக வாய்ச் சண்டையை ஆரம்பிக்க அது வாள்ச்சண்டையில் முடிகிறது.

கலிங்கத்து வீரர்களிடமிருந்து தப்பி வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் ஒளிந்து கொள்கிறான். கதாநாயகியை அறிமுகம் செய்ய இதை விட ஒரு நல்ல சமயம் வேண்டுமா? அந்த விடுதியில் தங்கியிருப்பவர் ஸ்ரீவிஜயத்தின் இளவரசரான குணவர்மர் மற்றும் அவர் மகள் காஞ்சனா. ஸ்ரீவிஜயம் இன்றைய சுமத்ரா, இந்தோனேசியா. குணவர்மர் அவர் தம்பி ஜெயவர்மனால் வஞ்சிக்கப்பட்டு அரியணையில் ஏறமுடியாமல் கடாரத்த்தின்(மலேசியா) இளவரசராகவே உள்ளார். எனவே வாரிசுச் சண்டையைத் தீர்த்துவைக்க இராஜேந்திரசோழரின் உதவியை நாடி சோழநாடு செல்வதற்காக பாலூரில் ரகசியமாகத் தங்கியிருக்கிறார்.

கலிங்கமும், ஸ்ரீவிஜயமும் நட்பு நாடுகள். எனவே பீமனும், ஜெயவர்மனும் நண்பர்கள் என்பதையும் நினவில் கொள்க. எனவேதான் குணவர்மர் ரகசியமாகத் தங்கியிருக்கிறார். காஞ்சனாவின் அறையில் ஒளிந்திருக்கும் இளையபல்லவனுக்கும், காஞ்சனா, குணவர்மருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. இளையபல்லவனை மோப்பம் பிடித்த கலிங்கவீரர்கள் விடுதிக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி சோழநாடு ஒற்றனான வணிகன் சேந்தனின் வீட்டிற்குச் செல்கிறான். அதற்குள் அங்கே சேந்தனும் கலிங்கவீரர்களிடம் சிறைப்ப்ட்டிருக்கிறான். இளையபல்லவனும் சிறைப்படுகிறான். நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

சிறையிலிருக்கும் இளையபல்லவனுக்கு அநபாயன் ’அவர்களை எப்படியாவது மீட்பதாகச்’ செய்தி அனுப்புகிறான். சிறையிலிருக்கும் அநபாயர் எப்படித் தன்னைச் சிறைமீட்பார் என யோசிக்கிறான் பல்லவன். எல்லாத் தடைகளையும் மீறி நீதிமன்றத்தில் காஞ்சனாவின் உதவியுடன் அட்டகாசமாக அனைவரையும் சிறைமீட்கிறார் அநபாயன். தப்பிச் செல்லும் அனைவரும் பாலூருக்கு வெளியில் கடற்கரைக் கிராமத்தில் தங்குகிறார்கள். பின்னர் காஞ்சனாவிற்கும் இளையபல்லவனுக்கும் காதல் அரும்புகிறது.



(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.)

சோழநாட்டு இளவரசனும், தூதுவனும், ஒற்றர்களும் தப்பிய செய்தியால் கலிங்கம் முழுவதும் கடும் பாதுகாப்பு இடப்படுகிறது. எனவே தரைவழியாக சோழநாடு செல்வது இயலாத காரியம். கடல்வழியாக மட்டுமே செல்லமுடியும். ஆனால் அங்கும் பாதுகாப்பு பலமாயிருக்குமென்பதால் திட்டமிட்டு சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இப்போதுதான் அறிமுகமாகிறான் அமீர். அரபு நாட்டவன். கதையின் மிகமுக்கியமானவன். அநபாயரின் நண்பன். அமீர் அவர்களை எப்படியாவது தப்பவைப்பதாக வாக்குறுதி கொடுத்து, அவர்களைத் தன் குருவும், கொள்ளையன் என்றும், மாவீரன் என்றும் அறியப்பட்ட அகூதா என்னும் சீனத்துக் கடலோடியிடம் அழைத்துச் செல்கிறான். அகூதா பெரும் வணிகர். கப்பல்களுக்குச் சொந்தக்காரர்.

அநபாயர், இளையபல்லவன், குண்வர்மர், காஞ்சனா, சேந்தன் ஆகிய அனைவரும் மாறுவேடத்தில் அகூதாவின் ஊழியர்கள் போல பாலூர்த் துறைமுகத்தில் நுழைந்து அனைத்துக் காவலையும் உடைத்து பூம்புகார் செல்லும் மரக்கலத்தில் ஏறித் தப்பிப்பது என்பது திட்டம். மிகவும் ஆபத்தான திட்டம். இதனால் ஓரிருவர் இறக்கும் வாய்ப்பும் உள்ளது. துறைமுகவாயிலில் இவர்களின் வேடம் கலையவே ஆரம்பிக்கிறது சண்டை. இளையபல்லவன் சண்டையில் பலத்த காயமடைகிறான். அவனால் மரக்கலம் செல்லமுடியாமல் கடற்கரையிலேயே விழுந்துவிடுகிறான். அநபாயர், குணவர்மர், காஞ்சனா மட்டுமே மரக்கலத்தை அடையமுடிகிறது. அமீரும், சேந்தனும் மரக்கலத்தில் ஏறாமல் கடற்கரையின் மற்றொரு பகுதியை நோக்கி ஓடுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது??????

அதை அடுத்த பாகத்தில் தான் பார்க்கவேண்டும் :)))))


பட்டையைக் கிளப்பும் இப்புதினத்தில் நிறைய அருமையான சரித்திரத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

1) இராஜேந்திரசோழருக்குப் பின்னர் இரண்டாவது முறையாகக் கடாரமும், ஸ்ரீவிஜயமும் சோழர்களால் வெல்லப்பட்டிருக்கிறது.

2) இளையபல்லவன் பின்னாளில் ’கருணாகர தொண்டைமான்’ எனப் பெயர் கொண்டு கலிங்கத்தின் மீது படையெடுத்து கலிங்கத்தை அழிக்கிறான். செயங்கொண்டார் இப்போரை வைத்துத்தான் ‘கலிங்கத்துப்பரணி’ பாடியிருக்கிறார்.

3) அடுத்தது நாடுகளின் பெயர்கள். இந்த ஆயிரம் ஆண்டுகளில் நாடுகளின் பெயர்கள் எவ்வளவு மாறிவிட்டன.
ஸ்ரீவிஜயம் - இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா
கடாரம் - மலேசியா
நக்காவரம் - நிக்கோபார் தீவுகள்
அட்சயமுனை - Banda Aceh (தமிழில் எப்படிச் சொல்வது??)

இன்னும் பல.....

சாண்டில்யன் அவர்கள் எழுதினால் கவர்ச்சி இல்லாமலா??? இதிலும் நிறைய இருக்கிறது. காஞ்சனாதேவியின் அறிமுகத்தில் மூன்று
பக்கங்களில் அவள் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இளையபல்லவன், காஞ்சனாதேவி காதல் காட்சிகளும் நிறைய உள்ளன. ;)

ஆமாம் அது என்ன கடல்புறா?? தெரியலங்க... ஒரு வேளை காஞ்சனாதேவியைத்தான் அப்படிச் சொல்கிறாரோ?? (தெரிந்தவர்கள் சொல்லவேண்டாம் :) ) ஒரே ஒரு இடத்தில் மட்டும் இளையபல்லவன், காஞ்சனாதேவியிடம் ‘வீட்டுப்புறா காட்டுபுறா கடல்புறா’ என்கிறான். அவ்வளவு தான்...

விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எழுதப்பட்டிருக்கும் இப்புதினம் சரித்திர ஆர்வம் கொண்ட அனைவரும் வாசிக்கலாம்.

இக்கட்டுரைக்கு நன்றி: வானவில்

                                              
                                             சாண்டில்யனின் கடல்புறா
                        
                                                               பாகம் 1  
                                                          பதிவிறக்கம் 
               
  நன்றி: தமிழ்தேனீ 




மேலும் கடல் புறா முன்னுரை மற்றும் முகவுரை


Sunday 3 July 2011

அகிலனின் வேங்கையின் மைந்தன் பதிவிறக்கம்


  பொன்னியின் செல்வன் பாதிப்பால் அதில் வரும் வந்தியதேவன், குந்தவை போன்றவர்களை மீண்டும் காணும் ஆர்வத்தால் வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாவல் அகிலனின் 'வேங்கையின் மைந்தன்'. இதன் ஆசிரியர் அகிலனுக்கு இந் நூலுக்காக சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. பொன்னியின் செல்வரின் மகன் ராஜேந்திர சோழன் காலத்தை பற்றி பேசுகிறது இந்நாவல். ராஜராஜசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் (பொன்னியின் செல்வனில் வானதி)பிறந்தவரே ராஜேந்திரன். ராஜேந்திர சோழன் 50 வயதளவிலேயே முடி சூடிக்கொண்டதால் அவரது முதுமைக்காலத்தை பற்றியே நாவல் பேசினாலும் அக் காலத்திலேயே ஈழம் சென்று மணிமுடி கைப்பற்றியமை , கங்கைகொண்ட சோழபுரம் அமைத்தமை போன்ற அவரது சாதனைகள் இடம்பெற்றமையால் வாசிக்க சுவையாக உள்ளது. இந் நாவலில் வந்தியதேவன் கிழவராக வருகிறார். ராஜேந்திரனுக்கு அரசியலில் ஆலோசனைகள் சொல்வதுடன் இளங்கோவுடன் ஈழம் சென்று மணிமகுடம் கைப்பற்ற உதவுகிறார்.

பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் போல வேங்கையின் மைந்தனில் இளங்கோ என்பவனே நாயகன். சோழப்பேரரசுக்காகவே தம் வாழ் நாட்களை அர்ப்பணித்த கொடும்பாளூர் வேளிர் குலத்தை சேர்ந்தவன். ராஜராஜசோழன் காலத்தில் ஈழப்போரில் மாண்ட பூதி விக்ரமகேசரி இவனது பெரிய பாட்டனார் ஆவார். ராஜேந்திரனுக்கு அருள்மொழி நங்கை, அம்மங்கை தேவி என இரு புதல்விகள். மூத்த புதல்வியான அருண்மொழி நங்கையையும் ரோகண இளவரசி ரோகினியையும் இளங்கோ திருமணம் செய்கிறான். அழகு, அறிவு, ஆற்றலில் சிறந்தவளான அருள்மொழியும் பேரழகியாக ரோகிணியும் என இரு நாயகிகள். பாண்டியர்கள் ஈழ மன்னரிடன் ஒப்படைத்த பாண்டிய மணிமுடியை கைப்பற்ற ராஜராகசோழன் காலத்திலேயே முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. ராஜேந்திரன் ஆட்சியில் இளங்கோ ஈழம் சென்று அம் முடியை கைப்பற்றுகிறான். ஈழ அரசனின் மகளான ரோகினியும் இளங்கோவும் காதலிக்கிறார்கள். ரோகிணி மூலமே மணிமுடி ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரிய வருகிறது. எதிரி நாட்டு வீரனை காதலிக்கும் ரோகிணி, தந்தைக்கும் , தம்பி காசிபனுக்கும் , நாட்டுக்கும் துரோகம் செய்கிறோமோ என துடிப்பதும் இளங்கோ மீது கொண்ட காதலில் இருந்து விடுபட முடியால் தவிப்பதுமாக இருக்கிறாள். ரோகிணி, இளங்கோ காதலே நாவலின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது பல இடங்களில் வாசிக்க அயர்ச்சியாக இருக்கிறது.

ஈழ நாட்டவர்களது உதவி இல்லாது தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் மணிமுடியை கைப்பற்றி இருக்க முடியாது.அதற்கு எதிரி அரசனின் மகளே உதவினாள் என்பது அதீத கற்பனையாகவே தோன்றுகிறது. சிங்கள அரசர்கள் பாண்டியர்களுடன் திருமண தொடர்புகள் வைத்திருந்ததாக வரலாற்றிலுள்ளது. சோழருக்கும் ஈழ மன்னர்களுக்கும் பாண்டிய மணிமுடி தொடர்பான போர் நீண்டகாலம் இருந்து வந்த நிலையில், எதிரி நாட்டு வீரனை ஈழ இளவரசி காதலித்தாள் என்ற கற்பனை கொஞ்சம் அதிகம் போலவே உள்ளது. பொன்னியின் செல்வனில் சோழ நாட்டுக்காகவே வாழும் குந்தவை மதிப்பு மிக்க பெண்ணாக போற்றப்படுகிறார். அவள் எடுக்கும் முடிவுகள் சோழ சாம்ராட்சியங்களுக்காகவே இருக்கிறது. வேங்கையின் மைந்தனில் கூட அருள்மொழி நங்கை தனது நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய தன்னிகரற்ற பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள். அப்படி இருக்க ஈழ நாட்டு ரோகிணி மட்டும் காதலுக்காக நாட்டையும் தந்தை, தம்பியையும் இழக்க நினைக்கும் பெண்ணாக காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இலங்கை வரலாற்றைப்பொறுத்தவரை, அரச குடும்ப பெண்கள் பல சந்தர்ப்பங்களில் போரில் வெற்றி பெற துணையாக நின்றுள்ளனர். நியாயமற்ற வழியாக இருந்தாலும் கூட . துட்டகைமுனு , எல்லாளன் போரை உதாரணமாக கொள்ளலாம். அப்படியிருக்க மகிந்தரின் மகள் எவ்வாறு எதிரி வீரனை காதலித்து தனது தந்தையின் ஆட்சி வீழ காரணமாக இருந்திருப்பாள். உண்மையில் மணி முடி கைப்பற்ற துணை புரிந்தவர்கள் யாராக இருக்கக்கூடும்.

ஈழ அரசன் மகிந்தனின் அமைச்சர் கீர்த்தி பற்றி குறிப்பிட வேண்டும் .சிறந்த ராஜதந்திரியாகவும் தமிழர்களை வெறுப்பவராகவும் இருக்கிறார். அடுத்து சுந்தர பாண்டியன், பாண்டியர்கள் சோழ ராட்சியத்தை வீழ்த்த செய்யும் சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜேந்திரன் இச்சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ராஜ ராஜனின் கனவாக இருந்த பாண்டிய மணிமுடி ராஜேந்திரனாலேயே நிறைவேறுகிறது.ராஜேந்திரர் காலத்தில் சோழ ராட்சிய விரிவாக்கம் அதிகம் இடம்பெறுகிறது. ஈழம் மட்டுமல்லாது கடாரம் வரை சென்று வெல்கிறான்.

இந் நாவல் சோழ ரட்சிய விரிவு, ஈழப்போர்,தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைமை மாறியமை போன்றவற்றை முதன்மையாக பேசுகிறது. பொன்னியின் செல்வன் வந்தியதேவன் போல் அல்லாது இளங்கோ தனியாக நின்று வீர சாகசங்கள் செய்கிறான். அதனால் யதார்த்தத்தன்மை குறைவான உணர்வை தருகிறது. இளங்கோ, ரோகிணி காதல் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது. மற்றும்படி ராஜேந்திர சோழன் ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நாவல். 

 
வேங்கையின் மைந்தன்: வரலாற்று ஆவலர்கள்வாசிக்க வேண்டிய நாவல்.


வேங்கையின் மைந்தன் பற்றிய சுருக்கமான கருத்துக்கு
நன்றி: இயற்கையின் மொழி


வேங்கையின் மைந்தன்  பதிவிறக்கம் 
 நன்றி: தமிழ்த் தேனீ